தோழர் தமிழரசன்
தோழர் தமிழரசன்
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு
கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார்.
இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட
இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சாரும் மஜும்தாரின் அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ML இயக்கத்தின் மாபெரும் முன்னோடி AMK என்கிற கோதண்டராமன் அவர்களுடன் இணைந்து ”மக்கள் போர்க்குழு” உறுப்பினராகப் பணியாற்றினார்.
1975-ல் அரசு இவரை அரியலூரில் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து தப்ப முயன்று பிடிபட்டார். பலமுறை முயன்று ஒவ்வொரு முறையும் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.
1984-ல் 9 ஆண்டு சிறை வாழ்வை முடித்துக் கொண்டு வெளிவந்த அவர் மீண்டும் AMK (எ) கோதண்டராமனுடன் தொடர்பு கொண்டார். அவருடன் இந்திய விடுதலையிலிருந்து தமிழக விடுதலை குறித்து தொடர்ந்து விவாதித்து வந்தார்.
1984-ல் மே மாதம் 5-6ம் தேதிகளில் கட்சி ஒரு மாநாடு ஏற்பாடு செய்தது. ”இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை” மற்றும் ”தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு” எனும் தலைப்பில் மாநாடு பென்னாடத்தில் நடந்தது.
மாநாட்டுக்குப் பின் ML அமைப்பிலிருந்து தமிழ்நாடு கிளை அமைப்பினர் வெளியேற்றப்பட்டனர். திருச்சி – தென்னார்காடு உள்ளிட்ட சில மாவட்ட ML தோழர்கள் 64 பேர் கொல்லிமலையில் கூடினர். அக்கூட்டத்தில் தாங்கள் இனி தனித்து இயங்குவது என முடிவு செய்தனர். கூட்டத்திற்கான அனைத்து முன்முயற்சிகளையும் தமிழரசன், சுந்தரம், புதுவை தமிழ்ச்செல்வம், தர்மலிங்கம் போன்றோர் செய்தனர்.
இப்படியாக ML இயக்கத்திற்குள்ளான கருத்து மோதல்களை அமைப்பு வடிவில் பிளவு படுத்திய முதல் தோழர் தமிழரசனே.
1985-ல் பெரம்பூர் மாவட்டம் மீன்சுருட்டியில் ”தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்” நடத்திய கருத்தரங்கில் ”சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்” எனும் பொருள்பட ஓர் அறிக்கையை தமிழரசன் முன்வைத்தார்
புலவர் கலியபெருமாள்டெல்லியில் நடந்த அகில இந்திய அளவிலான ML குழுக்களின் ஓர் கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து தோழர் புதுவை தமிழ்ச்செல்வன், புலவர் கலியபெருமாள் இருவரும் கலந்து கொண்டு தாங்கள் ”தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி” என பங்கு கொண்டனர்.
தமிழரசன் ”தமிழ்நாடு விடுதலைப் படை” எனும் பெயரில் இயக்கம் கட்டி இயங்கத் தொடங்கினார். சாதி ஒழிப்பிற்கான தேவை குறித்தும் தமிழக விடுதலை குறித்தும் தமிழகம் முழுக்கச் சுற்றி பல்வேறு தோழர்களையும், தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.
தமிழக விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கும் ஆயுதமேந்தும் அரசியல் குறித்து கருத்துப் பரப்புரையும், செயல் திட்டங்களையும் வகுத்துச் செயல்பட்டார். புதிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் சாதி ஒழிப்பு ஒரு முகாமையான பங்கை வகிக்கின்றது என்பதை முன்வைத்து செயலாற்றினார்.
பல்வேறு போராட்டங்களை கருவியேந்துதல் வழி செயல்படுத்திய தமிழரசன் தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி ஆற்று நீர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டி ஒரு திட்டம் தீட்டினார்.
அதை செயல்படுத்த தேவைப்படும் பொருளியல் ஈட்டல் நடவடிக்கை மேற்கொண்டபோது பொன்பரப்பியில் உளவுத்துறையின் சதியால் காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டார். தமிழரசனுடன் தர்மலிங்ம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் போன்ற தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைமைக் குழுவினர் ஐந்து பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
தோழர் தமிழரசன்1947 விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆதிக்க சாதி பண்ணைக்காரர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலக்கட்டத்தில் இந்தியாவெங்கும் இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த இயக்கங்களின் செயல்பாடு தீவிரமாகி 1960களின் பிற்பகுதியில் மேற்குவங்காளத்தில் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் அமைப்பான மக்கள் யுத்தக் குழு - People's War Group - PWG தோன்றியது. இந்த அமைப்பு மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்தது.
கடலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், பென்னாடம், தருமபுரி போன்ற பின் தங்கிய கிராமங்களில் தான் இந்த இயக்கம் வளர துவங்கியது. இதற்கு இந்தப் பகுதியில் நிலவிய சமூக, பொருளாதார சூழலும் முக்கிய காரணம். வடமாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். இந்தப் பகுதியின் முக்கிய பொருளாதாரம் முந்திரி. முந்திரி வருடம் முழுக்க மகசூல் கொடுக்க கூடிய பயிர் அல்ல. வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே முந்திரி கிடைக்கும். பிறகு சீண்டுவார் இல்லை. இந்த முந்திரி காடுகளும் சிறு விவாசாயிகள் சொந்தமாக வைத்துக் கொள்ளக்கூடியவை அல்ல. பெரும் பண்ணைக்காரார்கள் வசம் தான் நிலங்கள் இருந்தன.
இப்பகுதியின் பெரும்பான்மை மக்களான வன்னிய, தலித் மக்கள் இந்தப் பண்ணைக்காரர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருந்து வந்தனர். பிற மாநிலங்களில் பண்ணைக்காரர்கள் - அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான போராட்டம் வெடித்த பொழுது இப்பகுதியிலும் இந்தப் போராட்டம் வேரூன்ற தொடங்கியது. நக்சலைட் இயக்கங்களும் தமிழ் மண்ணில் அறிமுகமாகின.
நக்சலைட் இயக்கமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் பின் தமிழ் தேசியமாக, ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை அடையும் இயக்கமாக உருவெடுத்தது. தமிழகத்தின் முதல் குண்டுவெடிப்பும் இப்பகுதியில் தான் நடந்தேறியது. அதனை அறிமுகப்படுத்தியர் பென்னாடத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள். பள்ளி ஆசிரியராக இருந்த புலவர் கலியபெருமாள் "மக்கள் யுத்தக் குழு" இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். மேற்குவங்க நக்சலைட் தலைவர் சாரு மஜும்தாருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
புலவர் கலியபெருமாள் மூலமாக நக்சலைட் இயக்கம் வடமாவட்டங்களில் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு புலவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட பொழுது அந்த குண்டுகள் வெடித்ததால், தீவிரவாத இயக்கம் பற்றிய செய்திகள் வெளிவரத்தொடங்கின. அவர் மீது கொலைக்குற்றம் போன்ற பொய்வழக்குகள் சுமத்தப்பட்டு அரசு அவரை சிறையில் அடைத்தது.
நக்சலைட் இயக்கத்தின் திருப்பு முனையாக இத் தருணத்தில் தோழர் தமிழரசன் உருவாகினார். 1980களில் இந்த இயக்கம் மிக வேகமாக வளர முக்கிய காரணம் தோழர் தமிழரசன் தான். People war Group இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் அவர் உயர்ந்தார். சாதியில்லா சமுதாயம் அமைப்பது, பண்னை நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுப்பது போன்றவை இவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. அதே சமயத்தில் தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளில் நம்பிக்கை உடையவராக தமிழரசன் விளங்கினார்.
1985ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு ஆதராக தமிழகத்தில் உணர்வு அலைகள் கரைபுரண்ட பொழுது, தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றோர் தங்களை தமிழ்தேசிய உணர்வுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இதனால் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர். இதன் பிறகு தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக "தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)" என்ற அமைப்பை தோழர் தமிழரசன் தோற்றுவித்தார்.
பொறியியல் பயின்ற தோழர் தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவராக இருந்தார். 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. மைய அரசின் தளங்களை தான் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கியது. தனித்தமிழ்நாட்டை உருவாக்கி அங்கு சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயத்தை அமைப்பது தான் தன்னுடைய லட்சியம் என்று தமிழரசன் முழங்குவார். பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் ஏழைகளுக்கு அளிப்பார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது லட்சியமாக இருந்தது.
1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவரை அடையாளம் தெரியாமல், அவர் "தோழர் தமிழரசன்" தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுட்டிருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்ல வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். இதை விட ஒரு சோகமான விடயம் பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தோழர் மறைந்து போனார்.
கொல்லப்பட்டது தமிழரசன் தான் என்று பிறகு கேள்விபட்டவுடன் பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் நிலவிய சோகம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. இப்பகுதி மக்கள் தமிழரசனை நேசித்தனர். அவரது முகம் கூட தெரியாமல் அவரது சேவைகள் மட்டுமே பலர் நினைவில் இருந்தது. இன்றும் நிற்கிறது.
தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றவையாக தெரியலாம். ஆனால் 1980களில் இப் பகுதியில் நிலவிய வறுமை, அறியாமை போன்றவையுடன் பொருத்தி பார்த்தால் அவருடைய போராட்டத்தின் பொருள் விளங்கும்.
தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி குறித்து பொய்க்கதைகளை தான் அவிழ்த்து விட்டனவே தவிர ஒரு பத்திரிக்கை கூட உண்மை நிலையை எழுதவில்லை.
தமிழக வரலாற்றில் மக்களை நேசித்த மாமனிதர்கள் பட்டியலில் தமிழரசனின் பெயர் முக்கியமானது. என்னைப் பொருத்தவரை நான் வாழ்ந்த காலக்கட்டத்தில் கண்ட முக்கியமான தியாகம் இது (இதேக் காலக்கட்டத்தில் என்னை மிகவும் பாதித்த மற்றொரு நிகழ்வு திலீபனின் மரணம்)
(செப்டம்பர் 1ம் தேதி அவரது நினைவு நாள் அன்று இந்தப் பதிவை எழுத நினைத்து மிக தாமதமாக வெளிவருகிறது)
No comments:
Post a Comment